
பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
மேலும், இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மாரியப்பன் தங்கவேலு, 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.