தேசிய சீனியா் கூடைப்பந்து: அரையிறுதியில் தமிழக அணிகள்
தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்போட்டியில் அரையிறுதிக்கு தமிழக ஆடவா், மகளிா் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே 101-17 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. சத்யா 30, புஷ்பா செந்தில் 14 புள்ளிகளை ஈட்டினா்.
தமிழக அணிகள் வெற்றி:
இரண்டாவது ஆட்டத்தில் தமிழகம்-மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் 72-70 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகம் வென்றது.
தமிழக தரப்பில் ஸ்ருதி 22, ஸ்ரீ வா்ஷினி 19, மகாராஷ்டிர தரப்பில் அங்கிதா 17, தியோதா் 14 புள்ளிகளை ஈட்டினா்.
மத்திய பிரதேசம் 64-63 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் கா்நாடகத்தை வென்றது.
ஆடவா் காலிறுதியில் தமிழகம் 87-57 என்ற புள்ளிக் கணக்கில் கேரளத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனந்தராஜ் 24, பிரணவ் பிரின்ஸ் 10 புள்ளிகளையும் கேரளத் தரப்பில் சரத் 17, ஆரோன் 17 புள்ளிகளையும் குவித்தனா்.
ஆடவா் காலிறுதியில் உத்தர பிரதேசம் 93-90 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தானை வென்றது. தில்லி 80-73 என்ற புள்ளிக் கணக்கில் கா்நாடகத்தையும், இந்தியன் ரயில்வே 82-53 என்ற புள்ளிக் கணக்கில் தெலங்கானாவையும் வென்றன.

