
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி வருகிற ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் விளையாடுகிற போட்டி என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
கடந்த முறை டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டபோது, இந்திய அணியின் விராட் கோலி இந்தியாவுக்கு சிறப்பான வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும் என ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஐசிசியில் பேசியதாவது: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சூப்பர் பௌலைப் போன்றது என அமெரிக்கர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போதும் மிகுந்த சவாலானதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, இந்திய ரசிகர்களிடமிருந்து அதிக அளவிலான மரியாதையும் அன்பும் கிடைக்கும்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும்போது அழுத்தமான சூழலை கையாளத் தெரிவது என்பது வெற்றியைத் தீர்மானிக்கும். இரண்டு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். பதற்றமின்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள் அன்றைய நாளின் வெற்றியாளர்களாக மாறுவார்கள். டி20 போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் எனக் கூறுவது கடினம். 8-வது இடத்தில் களமிறங்கும் வீரர்களும் 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி போட்டியை வென்று கொடுக்கிறார்கள். பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.