
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசுவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பாராட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹார்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், ஹார்திக் பாண்டியா பகுதி நேர பந்துவீச்சாளர் போன்று தெரியவில்லை எனவும், அவரால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா பந்துவீசுவதைப் பார்க்கும்போது, அவர் பகுதிநேர பந்துவீச்சாளர் போன்று தெரியவில்லை. அவரால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீச முடியும். ஆஸ்திரேலிய அணிக்காக மார்கஸ் ஸ்டாய்னிஸ் செய்வதை இந்திய அணிக்காக ஹார்திக் பாண்டியா செய்கிறார். முக்கியமான நேரத்தில் சிறப்பாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார். இந்த திறன் ஆல்ரவுண்டர்களுக்கு மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். ஹார்திக் பாண்டியாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவரால் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுத் தர முடியும். அதேபோல சிறப்பாக பேட் செய்து ஆட்டத்தை வென்றுகொடுக்க முடியும் என்றார்.
குரூப் சுற்றில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.