
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். டி காக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். ரீஸா ஹென்ரிக்ஸ் நிதானமாக விளையாடினார். தென்னாப்பிரிக்க அணி 86 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன்பின் களமிறங்கிய ஹெய்ன்ரிச் க்ளாசன் (8 ரன்கள்), அய்டன் மார்கரம் (1 ரன்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் டேவிட் மில்லர் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர். டேவிட் மில்லர் அதிரடியாக விளையாட அவருக்கு உதவியாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் நிதானமாக விளையாடினார். இருப்பினும், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.