
அரைசதங்களோ அல்லது சதங்களோ பெரிய விஷயமில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 92 ரன்கள் எடுத்து 8 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இந்த நிலையில், அரைசதங்களோ அல்லது சதங்களோ பெரிய விஷயமில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. நல்ல ஆடுகளங்களில் நாம் விரும்பும் ஷாட்டுகளை சுதந்திரமாக விளையாடலாம். இதுபோன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். அப்படியான ஆட்டம் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வந்துள்ளது மகிழ்ச்சி. அரைசதங்களோ அல்லது சதங்களோ பெரிய விஷயமில்லை. இன்று அதிரடியாக பேட் செய்தது போன்று தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் என்றார்.
நாளை மறுநாள் (ஜூன் 27) நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.