
தரௌபாவில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தெ.ஆ. அணி 8.5 ஓவரில் இலக்கை அடைந்து இறுதிப் போட்டிக்கு முதல்முறையாக தேர்வானது.
தெ.ஆ. சார்பில் மார்கோ யான்சென் 3, ரபாடா, நோர்க்யா தலா 2 என வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது இந்த ஆடுகளம்.
இந்தப் போட்டியின் ஆடுகளம் (ஃபிட்ச்) குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆப்கன் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறியதாவது:
நான் பிரச்னையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. வெற்றி பெற முடியாததால் நான் குறைகூறவில்லை. ஆனால் இது உலகக் கோப்பையின் அரையிறுதிக்கான ஃபிட்ச் இல்லை. இது நேர்மையான போட்டியாக இருந்திருக்க வேண்டும்.
இந்த ஃபிட்ச் முழுமையாக தட்டையாக இருக்கிறது என்றோ அல்லது ஸ்பின் இல்லை என்றோ கூறவில்லை. ஆனால் பேட்டர்கள் முன்னோக்கி சென்று விளையாட கவலைப்படக்கூடாது. முன்னோக்கி காலை வைத்து அடிக்க தயங்கக்கூடாது.
டி20 கிரிக்கெட் என்பது அடித்து ஆடுவது. விக்கெட்டுகள் எடுப்பது. விக்கெட் விழாமல் தடுக்க நினைப்பதல்ல. இந்தத் தொடர் முழுவதுமே ஸ்விங்கும் ஸ்பின்னும் இருந்தன. ஆனால் தரௌபாவில் நடைபெற்ற 5 போட்டிகளில் ஒன்று மட்டுமே 100 ரன்களை கடந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. அதில் மே.இ.தீ. அணி விளையாடியது.
ஒரு அணி நன்றாக பந்து வீசுவது அடுத்த அணி அதைவிட நன்றாக பந்துவீசுவதும் அதற்காக தகவமைப்பதும் அவர்களின் திறமையைப் பொருத்தது. ஆனால் பந்து திடீரென உயர்வதும் தாழ்வதும் உருளுவதுமாக இருந்தன. எங்கள் அணியிலும் தெ.ஆ. போல வேகப் பந்து வீச்சாளர்கள் இருந்திருந்தால் சுவாரசியமான இரண்டாம் பாதியை பார்த்திருப்பீர்கள்.
ஆடுகளத்தை தெ.ஆ. சரியாக பயன்படுத்திக்கொண்டது. மிடில் ஆர்டர் பேட்டர்கள் குறித்து கவலை இருக்கிறது. அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.