"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'' என்றும்,
""தாயிற் சிறந்ததொரு கோயிலு மில்லை; தாய்சொல் துறந்தால் வாசக மில்லை'' என்றும் தாயின் பெருமை பேசியவர் ஒüவையார். தன் பிள்ளைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து, தியாகம் செய்யக்கூடியவள் தாய் ஒருத்திதான்.
÷ஒவ்வொரு தாயும் ஒரு மகவைப் பெறும்போது மரண வேதனையை அனுபவிக்கிறாள்; மறுபிறவி எடுக்கிறாள். தன் ரத்தத்தைப் பாலாக்கித் தரும் ஓர் உன்னதமான - அற்புதமான சக்தியை கடவுள் மனித உயிர்களில் தாய்க்குத்தான் வழங்கியுள்ளார்.
""மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால்சலித்தேன்;
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே! இன்னம்ஓர் அன்னைக்
கருப்பையூர் வாராமல் கா!''
எனக் கதறி அழுதவர் பட்டினத்தடிகள். காரணம், மறுபிறவி வாய்த்தால் அப்போதும் ஒரு தாய்க்கு (மரண வேதனை) வேதனை தரவேண்டுமே; அந்த வேதனையை, என்னைச் சுமப்பதால் ஒரு தாய்க்குத் தந்துவிடக்கூடாதே என்பததால்தான் மறுபிறவிக்கு அஞ்சினார். இப்பிறவி தாய்க்கு மட்டுமல்ல இனி அடுத்தடுத்த பிறவி வாய்த்தால் அந்தத் தாய்க்கும் நான் மரண வேதனையைத் தந்துவிடக்கூடாது; அதனால் எனக்குப் பிறவியே வேண்டாம்' என்று இருப்பையூர் சிவனை வேண்டிநின்றார்.
ஒவ்வொரு குழந்தையைப் பெறும்போதும் ஒவ்வொரு அன்னையும் ஒவ்வொரு மறுபிறவி எடுக்கிறாள். ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்க ஓர் அன்னை படும் துன்பம் சொல்லில் அடங்காதவை. கடவுள், தான் பூவுலகில் வந்து செய்ய முடியாத பல செயல்களை தாயின் மூலம்தான் நிறைவேற்றுகிறான் என்றுகூடக் கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் தன் தாயின் திருவடிகளை வணங்குபவரை எல்லாத் தேவதைகளும், தெய்வங்களும் ஆசீர்வதிக்கின்றனவாம். கடவுளை வணங்காதவராக - கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும்கூட அவர் தன் தாயின் திருவடிகளை வணங்கி, ஆசிபெற்றால் எல்லாத் தெய்வங்களும் அவர்களையும் ஆசீர்வதிக்கின்றனவாம் - இது இந்துமதம் கூறும் உண்மை.
சைவத் திருமுறை அருளாளர்களையும், ஆழ்வார் பெருமக்களையும், ஏசு, அல்லா, புத்தன், வள்ளுவர், ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், காஞ்சி முனிவர், வள்ளலார், கிருபானந்தவாரியார், தாயுமானவர், பட்டினத்தடிகள், பாம்பன் சுவாமிகள், காந்தி, கம்பர், பாரதி, முதலிய (கூறினால் பட்டியல் நீளும்) பல அருளாளர்களையும் ஞானிகளையும், மேதைகளையும், இவ்வுலகுக்கு ஈந்த அன்னையர் போற்றப்பட வேண்டியவர்கள் அல்லவா? பெருமைக்குரியவர்கள் அல்லவா?
குமரகுருபர சுவாமிகள்,
""பாலூண் குழவி பசுங்குடர் பொறாதென
நோயுண் மருந்தைத் தாயுண் டாங்கு''
என்று பாடியுள்ளார். பட்டினத்தடிகளோ,
""முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாளளவும்
அந்திபக லாய்ச்சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்'' என்றும்,
""ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்'' என்றும்,
""வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்''
என்றெல்லாம் தாயின் பெருமையைப் பாடியுள்ளார்.
"" பெண்ணின் பெருந்தக்க யாவுள'' என்றும்,
""ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்''
என்றும் போற்றினார் வள்ளுவப் பெருந்தகை.
தன் குழந்தைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் அவற்றையெல்லாம் மன்னித்து, அரவணைத்து, அவர்கள் நன்மக்களாய் வளர வேண்டும்; அனைத்து நலன்களையும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும்; பேரும் புகழும் பெறவேண்டும் என்றெல்லாம் நினைப்பவள் அன்னை ஒருத்தி மட்டும்தான். இந்த உள்ளம் உலகில் வேறு எவர்க்கும் வாய்க்காதது.
""இந்த உலகில் முதலில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாதாதான். ஆசிரியரைவிடப் பத்து
மடங்கு அதிகம் ஆசார்யன். (உயிர் மேற்கதியடைய தீட்சை தரும் சமய குருநாதர் ஆசார்யன்). ஆசார்யனைவிட நூறு மடங்கு அதிகம் தந்தை. தந்தையைவிட ஆயிரம் மடங்கு அதிக மகத்துவமும் பெருமையும் உடையவள் தாய். இணையில்லாத இன்ப அன்புக்கு உரியவள் மாதாவாகும்'' என்றார் கிருபானந்தவாரியார்.
தாயின் பெருமையை வள்ளலார் சுவாமிகள் பின்வருமாறு எடுத்தோதுகிறார்:
""வன்மை யறப்பத்து மாதஞ் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - மன்னுலகில்
மூளும் பெருங்குற்றம் முன்னிமேன் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் -
காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞால மிசையளிக்கும் நற்றாய்காண்
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யுந்துயரும்
நம்பிணியும் தீர்த்தருளும் நற்றாய்காண்
வாடியழு தாலெம் வருத்தந் தரியாது
நாடி எடுத்தணைக்கும் நற்றாய்காண்''
இத்தகைய தாயைப் போற்றுவதே நமது முதற் கடமையாகும். அன்றி, அவள் மனம் நோக வேதனைப்பட வைப்பது தகாத செயலாகும். அன்னை சிந்தும் கண்ணீருக்கு இறைவன் உடனுக்குடன் பதில் தந்துகொண்டிருக்கிறான் என்பார்கள் ஆன்றோர்கள்.
""பெண்மைக்குள்ள பெருமை யாது? பெண்மையின் மாட்டு உலக வளர்ச்சிக்குரியதும் தொண்டுக்குரியதுமாய் "தாய்மை'
பொலிதலான். அது பெருமையுடையதாகிறது. பெண்மைக்குள்ள பெருமையெல்லாம் தாய்மையாலென்க. தாய்மையில் நிலவுவது இறைமை. அவ்விறைமை பெண்மையின் முடிந்த நிலையாகும்.
இறை எது? சமய நூல்கள் பலவாறு கூறும். அக்கூற்றுக்களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. பொய், பொறாமை, அவா, சீற்றம், தன்னலம் முதலியவற்றைக் கடந்த ஒன்று இறை என்பது. ஒருவர் உள்ளத்தில் அன்பு நிகழும்போது இப்பொய், பொறாமை முதலியன நிலவுமோ? பொய், பொறாமை, அவாவால் எரியும் ஒருவன் உள்ளத்தில் அன்பு ஒதுங்கி நிற்றல் ஒவ்வொருவர் அநுபவத்தால் உணரக்கூடியது. அன்பு என்பது பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்பது என்று தெரிகிறது. பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்கும் ஒன்றே இறை என்றுஞ் சொல்லப்படுகிறது. ஆகவே இறையே அன்பு; அன்பே இறையாதல் காண்க.
பெண், பிள்ளை பெற்றதுந் தாயாகிறாள். அத்தாய் பிள்ளையை வளர்க்கப் புகுங்கால் அவள் உள்ளத்தில் இறைமைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன. தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு அவர் மாட்டு அரும்புகின்றன. கைம்மாறு கருதிக் குழந்தைக்குத் தாய் தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும் சமயம் நேரின் உயிரையும் பிள்ளை நலத்துக்குக் கொடுக்கத் தாய் விரைந்து நிற்கிறாள். தன்னலங்கருதிக் குழந்தையை வளர்க்குந் தாய் யாண்டுமிராள். பயன் கருதாத் தொண்டு, தியாகம், தன்நல மறுப்பு முதலியன சேர்ந்த ஒன்றே "தாய்மை' என்க. இந்நீர்மைகள் உள்ளவிடத்தில் பொறாமை, அவா முதலியன இரும்புண்ட நீர் போல ஒடுங்கிப் போகின்றன. இந்நிலை பெற்ற தாயுள்ளத்தில் என்ன நிலவும்? அன்பாய் இறையன்றோ நிலவும்? தாயுள்ளத்தில் அன்பே ஊர்ந்து கொண்டிருத்தலால் அன்புக்கு எடுத்துக் காட்டாகத் தாயன்பையே கொள்வது ஆன்றோர் வழக்கம். தாய் எனினும் அன்பெனினும் ஒக்கும்'' என்றும், ""பெண்ணுக்கு மதிப்பு கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; வணக்கஞ் செலுத்துங்கள். பெண்ணை மதித்துப் போற்றலே நாகரிகம். அவளைக் கட்டுப்படுத்தல், அடிமைப்படுத்தல், கொடுமையாக நடத்தல் அநாகரிகம். பெண் மகளாகத் தோன்றினாள்; மனைவியாக வாழ்கிறாள்; தாயாகத் தொண்டு செய்தாள். இப்போது தெய்வமாகக் காட்சியளிக்கிறாள். உலகீர்! தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்? இதோ தெய்வம் - பெண் தெய்வம், காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்! என்கிறார் "தமிழ்த் தென்றல்' திரு.வி.க. (நூல்: பெண்ணின் பெருமை).
""தாயை அழவிடாதீர்கள்; ஏனெனில், அவள் கண்ணீரை ஆண்டவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்'' என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார்.
""மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னவரும்
பண்கண்டளவிற் பணியச் செவ்வாய்ப்படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகலகலாவல்லியே''
என்று குமரகுருபரர் அன்னை சரஸ்வதி தேவியைக் கூறிய இவ்வாக்கு, "கண்கண்ட தெய்வமாக' ஒவ்வொரு இல்லத்திலும் குடியிருக்கும் அன்னையர்க்கும் பொருந்தும்.
அன்னையைப் போற்றுவோம்... நம்மைப் பிறர் "சான்றோன்' எனக் கூறவைத்து பெற்ற அன்னைக்குப் பெருமை சேர்ப்போம்! எங்கும் பெண்மை பொலியட்டும்; எங்கும் தாய்மை ஓங்கட்டும்! எங்கும் இறைமை வாழட்டும்! இது அரசர்கள் ஆண்ட பூமி மட்டுமல்ல; அன்னையர் ஆண்ட - ஆட்சி செய்துகொண்டிருக்கும் புண்ணிய பூமியும்கூட! "எத்தனை கோடி அன்னையர் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்
தனரோ, அனைவருக்கும் நம் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்!
இன்று: அன்னையர் தினம்
நூல் அகராதி அறிவோம்...
பத்துப்பாட்டு : சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்று. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் இதில் உள்ளன. முருகப் பெருமான் தொடங்கி பத்து பேரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பத்து புலவர்கள் பாடிய பாடல்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழப்பாடியை தொழில்நகரமாக்க வலியுறுத்தல்

தம்மம்பட்டியில் வட்டச்சாலை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

சங்ககிரி தொகுதி: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்களை சேகரிக்கும் பணியில் வருவாய்த் துறையினா்

சங்ககிரி தொகுதியில் அஞ்சல் வாக்கு எண்ணும் பணிக்காக மரப்பெட்டிகள் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

