வேலூர், ஆக. 13: சென்னை - பெங்களூரை இணைக்கும் தங்க நாற்கரத் திட்ட தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள 3 மாவட்டத் தலைமையக அரசு மருத்துவமனைகளில், நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் பணியிடம் காலியாகவே உள்ளது.
இதனால் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 7 மாதங்களில் 620 பேர் இறந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கும் ஏராளமானோர் உரிய சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்வோர், காஞ்சிபுரம் வழியாக வாலாஜா வரை 107 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை எண்.4, அங்கிருந்து வேலூர் வழியாக கிருஷ்ணகிரி வரை 148 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை எண்.46, கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாகத் தமிழக எல்லை வரை 59 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை எண்.7 என தமிழகத்துக்குள் மொத்தம் 314 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
4 வழிச் சாலைகள் அமைத்தாலும், ஓட்டுநர்களின் கவனக் குறைவால் ஆங்காங்கே விபத்துகள் நேர்கின்றன. தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க பாதசாரிகளுக்குப் போதிய வசதிகள் செய்துதராததாலும், விபத்துகளில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
இந்த இடைப்பட்ட தூரங்களில், தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி அதையொட்டிய மாநில, மாவட்டச் சாலைகளில் நேரும் விபத்துகளிலும் கூட உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
இவ்வாறு விபத்துகளில் காயமடைவோர், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள "108 ஆம்புலன்ஸ்' மூலம், அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அதிகபட்சம் 22 நிமிடங்களில் கொண்டு செல்லப்படுகின்றனர். ஆனால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடங்குவதற்கே அரை மணி நேரத்துக்கும் மேலாகிறது என்கிறனர் பாதிக்கப்பட்டோர்.
மேலும், விபத்துகளில் உயிரிழப்போரில் 90 சதவீதம் பேர் தலைக் காயத்தால் மட்டுமே இறக்கின்றனர் என்கிறது கணக்கெடுப்பு.
மேலும், விபத்து நேர்ந்த பிறகுள்ள அரை மணி நேரம் மட்டுமே உயிர்க்காக்கும் "பொன்னான நேரம்'. இவற்றைத் தவற விடுவதன் மூலம் விபத்தில் பாதிக்கப்படுவோர் பலர் உயிரிழக்கின்றனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், 314 கி.மீ. தூரம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையைக் கொண்டிருக்கும் காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில், நரம்பியல் சிறப்பு மருத்துவர் பணியிடம் காலியாகவே உள்ளது. விபத்தின்போது, தலையில் பலத்த அடியால் செயலிழக்கும் நரம்பு மண்டலகளைச் சீரமைக்க வேண்டிய மருத்துவர் பணியில் இல்லாததால், சென்னை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்படும் பலர் உயிரிழக்கின்றனர்.
இந்த மருத்துவமனைகளுக்கு மருத்துவர் நியமிக்கப்பட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே பணியிடம் மீண்டும் காலியாகிறது. இதனால், தலைக்காயத்துக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் 365 பேர். காயமடைந்தோர் 1,340 பேர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் உயிரிழந்தோர் 255 பேர்; காயமடைந்தோர் 1,186 பேர்.
காஞ்சிபுரத்தையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும். இவர்களில் பலர், உரிய சிகிச்சை இல்லாமல் உயிரிழந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஒரு மணிநேரம் போதும்! சட்டத்திருத்தம் குறித்து அமித் ஷா

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

