ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மனவளர்ச்சி குன்றியோர் நலனுக்காக அரசு சிந்திக்குமா?

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனில் அரசு காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என்ற கருத்து வலுவாக எழுந்துள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2012, 8:20 am

வேலூர், ஆக. 13: மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனில் அரசு காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என்ற கருத்து வலுவாக எழுந்துள்ளது.

தமிழக மக்கள் தொகை 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1 சதவீதம் பேர் மனவளர்ச்சி குன்றியோர். தற்போதைய நிலையில் இது மேலும் அதிகரித்திருக்கக்கூடும். கடந்த நிதிநிலை அறிக்கையில் மனவளர்ச்சி குன்றிய 50,619 பேருக்கு மாத உதவித் தொகை தலா ரூ.500 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிலும், 60 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை என்கிறது அரசு விதி. ஆனால், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே, தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை கிடைத்து விடுகிறது.

எனவே, அடையாள அட்டை வைத்திருக்கும் அனைத்து மனவளர்ச்சி குன்றியோருக்கும் அரசின் உதவித்தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மனவளர்ச்சி குன்றிய அனைவருக்கும் அரசு உதவித்தொகை கிடைக்கும் என்றால், இதுவரை அடையாள அட்டை பெறாத பலர் தாமாக முன்வந்து பதிவு செய்வார்கள்.

கைவிடப்பட்ட ஆசிரியர் நியமனம்: மனவளர்ச்சி குன்றியோருக்காகத் தமிழகம் முழுவதும் 250 சிறப்பு பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று மட்டுமே அரசு பள்ளி. மற்றவை தொண்டு நிறுவனங்களால் இயக்கப்படுபவை. இப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் 38 பேரை அரசு நியமித்து, 2-ம் நிலை ஆசிரியர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்கி வந்தது. 1992-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர்கள் நியமிப்பதை அரசு கைவிட்டது.

இப் பள்ளிகளுக்கு 750 சிறப்பாசிரியர்கள் உள்பட 1,250 பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி மையம் தேவை: மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் அவர்களுடைய அன்றாடத் தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்யத் தேவையான பயிற்சியை, சிறப்பாசிரியர்கள் அளித்து வருகின்றனர். ஆனால், சிறப்பாசிரியர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இளநிலை பட்டத்துடன் பிஎட் முடித்தோர் மட்டுமே சிறப்பாசிரியர் பயிற்சிக்கான சான்றிதழ் படிப்பில் சேரும் சூழல் உள்ளது. அதிலும், இச் சான்றிதழ் படிப்பை தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அளித்து வருகின்றன. எனவே, அரசு சார்பில் சான்றிதழ் படிப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் தேவை சிறப்பாசிரியர்கள்: பொதுப் பள்ளிகளிலேயே ஊனமுற்றோரைப் படிக்கவைக்கும் முறையை கடந்த 2001-ம் ஆண்டு முதல் அரசு அமல்படுத்தி வருகிறது.

ஆனால், மற்ற குழந்தைகள் படிக்கும் அதே படிப்பையும், இவர்கள் படிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி எனக் கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் 8 பேருக்கு ஒரு சிறப்பாசிரியரை பணியமர்த்த வேண்டும். இவர்களுக்கென தனி வகுப்பறை, தனி கல்வி முறை உள்ளிட்டவற்றை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக மனவளர்ச்சி குன்றியோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு மாநிலச் செயலர் எஸ்.நம்புராஜன் கூறியது:

1993-ல் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், 1995-ல் ஊனமுற்றோர் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கும் சட்டத்தை இயற்றியது மத்திய அரசு. ஆனால், அதை நிறைவேற்றத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அளவில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே சிறப்புப் பள்ளிகளில் பயிற்சி பெறுகின்றனர்.

வளர்ந்த நாடுகளில், பொதுப் பள்ளி மாணவர்களோடு ஒன்றாக விளையாடினாலும், தனி பாடப் பிரிவு பின்பற்றப்படுகிறது. இதுபோன்று தனி பாடத்திட்டத்தை ஏற்படுத்தாமல், பொதுப் பள்ளிகளில் போதுமான சிறப்பாசிரியர்களை நியமிக்காமல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பொதுப் பள்ளியில் சேர்ப்பதால் பயனில்லை என்றார் நம்புராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.