

ஒசூர்: ஒசூருக்கு கிழக்கில் 2-வது சிப்காட் அமைந்தபோது 1984-ம் ஆண்டு 780 ஏக்கர், 1997-ல் 200 ஏக்கர், 2007-ல் 150 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது.
சிப்காட் நிறுவனம் 1984-ல் விவசாயிகளிடம் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு ரூ.2239. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாயிகளிடம் இருந்து 780 ஏக்கர் நிலத்தை வாங்கி கூடுதல் விலைக்கு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் 1997-ல் சிப்காட் விரிவாக்கத்திற்கு விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கர் 1,00,660 என விலை நிர்ணயம் செய்தனர்.
2007-ல் மீதி இருந்த 150 ஏக்கர் நிலத்தை ஏக்கர் 50 ஆயிரத்திற்கு விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியதை தொடர்ந்து விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். விவசாயிகளிடம் இருந்து 50 ஆயிரத்திற்கு வாங்கி ஒசூரில் வெக் இன்டஸ்ட்ரீஸ், நெரோலேக் பெயின்ட்ஸ், டிரெக்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய 3 பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்தது சிப்காட் நிறுவனம். இந்த நிலங்களை இழந்த விவசாயிகள் கூலி வேலைக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டது. உரிய, நியாயமான விலையும் கிடைக்கவில்லை.
1994-ல் ஒரு ஏக்கர் நிலம் 1 லட்சம் விலை குறைவு என ஒசூர் நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர். ஒசூர் நீதிமன்றம் விவசாயிகளுக்கு 4,77,600 இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சிப்காட் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை, கூடுதல் சந்தை மதிப்பு, வெகுமதி தொகை, வட்டி என 14,75,000 விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 2007-ல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு இந்தத் தொகையை சிப்காட் நிறுவனம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
விவசாயிகளின் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ஆயிரம் மடங்கு அதிக விலைக்கு விற்றுவிட்டு இந்த ஏழைகளுக்கு நீதிமன்றம் அறிவித்த தொகையைக்கூட தரத் தயங்குவது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.