ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு?

ராமநாதபுரம், டிச. 27: ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் அரசு மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரத்த அணுக்களைப் பிரிக்கும் கரு
Updated on
1 min read

ராமநாதபுரம், டிச. 27: ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர், தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் அரசு மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரத்த அணுக்களைப் பிரிக்கும் கருவி இல்லாததால், பாதிக்கப்பட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர்.

ராமநாதபுரம் கே.கே. நகரை சேர்ந்த குருவன் மகன் பாலமுருகன் (14). இவர் கடந்த 10 நாள்களாக தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது தாயார் மாரியம்மாள் கூறுகையில், ""ரத்தப் பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சல் வந்திருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

தேவிபட்டினத்தைச் சேர்ந்த பல்கீஸ் பானு, முஸ்தபா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியது: மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து உற்பத்தியாகும் ஈடிஸ் ஏஜிப்டை என்ற கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் வருகிறது. வீடுகளில் பாத்திரங்கள், டயர்கள் ஆகியவற்றில் தண்ணீரை தேக்கி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் காய்ச்சல் சாதாரண காய்ச்சல் போன்றுதான் இருக்கும். ஆனால் உடலில் அதிகமான வலி இருக்கும். தொடர்ந்து வாந்தி வரும். மலம் கறுப்பாக இருக்கும்.

டெங்கு காய்ச்சலுக்குரிய ரத்தப் பரிசோதனைக்கு ரூ.700 வரை செலவாகும். ரத்தத்தில் பிளேட் லெட் எனப்படும் அணுக்களை மட்டும் பிரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலுத்த வேண்டும். அவ்வாறு பிரித்து அனுப்பும் கருவி ராமநாதபுரம் பரிசோதனைக்கூடங்களில் இல்லை. இந்தக் கருவி இல்லாததால் மதுரைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகமாக வருவதால் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையிலாவது உடனடியாக அந்தக் கருவி நிறுவப்பட வேண்டும் என்றார் அவர்.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் உமாமகேஸ்வரி கூறியதாவது: "ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேலப்புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 4 பேர் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனியாகவே ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. அங்கு இலவசமாக பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com