

திருவள்ளூர், ஜன. 9: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசு தரப்பில் வழங்கப்பட்ட பைக்குளின் பழுதுகள் குறித்து தங்களுக்கு வழங்கப்பட்ட சர்வீஸ் சென்டர் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அலட்சியப்படுத்துவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.
÷மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2010-ம் ஆண்டு மட்டும் 2 கால்களும் செயல் இழந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பைக்குகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் 4 பேருக்கு பைக்குகள், 50 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், கை, கால்கள் செயல் இழந்த 5 பேருக்கு சக்கர நாற்காலி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.
÷மேலும் 250 பேருக்கு காதொலி கருவி, 50 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், | 80 ஆயிரம் மதிப்புள்ள 2 செயற்கை கால்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
÷ஆனால் அந்த இயந்திரங்களின் செயல்பாடுகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்து யாரும் கண்காணிப்பதில்லை. இதனால் அரசு சலுகையை பயன்படுத்திய மாற்றுத்திறனாளிகள் பல வழிகளில் அவதிப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மூலம் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
÷இது குறித்து மெய்யூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபு கூறும்போது, "நான் பிறவியிலேயே இரு கால்களும் செயல் இழந்தவன். மெய்யூரில் இருந்து 10 கிலோமீட்டருக்கும் மேல், திருவள்ளூர் வந்து பி.சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.÷தினமும் மெய்யூரில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால் வாகனம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தேன்.
÷அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் எனக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பைக் வழங்கப்பட்டது.
÷இந்த பைக் நான் வீட்டில் இருந்து திருவள்ளூர் வந்து படித்துச் செல்ல மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் பைக் வழங்கிய சில மாதங்களில் பழுதாகி ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
÷இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, தொலைபேசி எண் ஒன்றை கொடுத்து இந்த எண்ணுக்கு போன் செய்தால் நேரடியாக வந்து பைக்கின் பழுதை நீக்கி தருவர் என கூறினர்.
÷இதையடுத்து சம்மந்தப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு போன் மூலம் தகவல் கொடுத்து பைக்கை பழுது பார்க்க பலமுறை கேட்டு வருகிறேன். முதலில் வருவதாக கூறிய சர்வீஸ் சென்டர் நிறுவனத்தினர் நாளடைவில் நாங்கள் வரமுடியாது, நீ பைக்கை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வாருங்கள் என அலட்சியமாக கூறுகின்றனர்.
÷நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களே தங்களது வாகனத்தை சென்னைக்கு எடுத்துச் செல்வதை தவிர்க்கும்போது பழுதான வாகனங்களை மாற்றுத் திறனாளிகளான நாங்கள் எப்படி எடுத்துச் செல்வது.
÷என்னை போல் அரசிடம் பைக் வாங்கிய பலர் இதே நிலையில் பைக்கை ஓரம் நிறுத்தியுள்ளனர்' என்றார்.
÷இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப்.டி.ரவியிடம் கேட்டபோது, "இதேபோல் புகார்கள் எனக்கும் வரப்பெற்றேன். இரண்டு நிறுவனங்களில் இருந்து பைக்கை வாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ளோம்.
÷அந்த 2 நிறுவனங்களிலும் பேசி இம்மாத இறுதிக்குள் நாங்கள் வழங்கிய அனைத்து பைக்குகளுக்கும் திருவள்ளூரில் இலவச சர்வீஸ் முகாம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்' என்றார்.
பழுதடைந்து பல மாதங்களாக ஒரம் கட்டப்பட்டுள்ள தமிழக அரசின் மூலம்
மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட பைக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.