திருவெறும்பூர்: தமிழகத்தில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயம் தற்போது வெகுவாக அழிந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 லட்சம் ஹெக்டேரில் நடைபெற்ற விவசாயம், இப்போது 48 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைப்பதில்லை, நிலத்தடி நீரும் வெகுவாகக் குறைந்து வருகிறது. உர விலை உயர்வு, வேலையாள் பற்றாக்குறையால் விவசாய நிலங்கள் விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன.
எஞ்சியிருக்கும் நிலங்களில் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள், இப்போது கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இதற்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமும் முக்கியக் காரணம்.
கிராம ஏழைகளின் வறுமையைப் போக்கும் நோக்கத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் அனைவரும் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், இந்தத் திட்டமானது விவசாயப் பணிகள் நடைபெறும் கால கட்டங்களிலும் செயல்படுத்தப்படுவதால் விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல கிராமங்களில் இயந்திரங்களைக் கொண்டு பணிகள் நடைபெற்றன. மேலும் சில கிராமங்களில் விவசாயமே மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் பயனடைந்தாலும், விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காததால் நிகழாண்டில் நடவுப் பணிக்கு இயந்திரங்கள், அதிக கூலி கொடுத்து வெளியூர்களிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தோம். இந்நிலை நீடித்தால், வருங்காலங்களில் விவசாய நிலங்களை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.
எனவே, விவசாயப் பணிகள் நடைபெறும் காலகட்டம் தவிர, மற்ற காலங்களில் வேலை உறுதித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.