சேலம், அக். 8: சேலத்தில் நிலப் பறிப்பு புகாரில் ஆத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர் வேட்பாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுக்கடை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவர் சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்புப் பிரிவு போலீஸில் கடந்த சில நாள்களுக்கு முன் புகார் மனு அளித்தார்.
அதில், தனக்கு சொந்தமான நிலத்தை ஆத்தூர் நகர திமுக துணைச் செயலாளரும் 18-வது வார்டு திமுக வேட்பாளருமான ஏ.பி.சேகர் (51) பறித்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார். இதன் பேரில் திமுக பிரமுகர் சேகர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சேலம் மாவட்டம், காகாபாளையம் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து. இவருக்கு தாண்டாயி, அல்லியம்மாள் ஆகிய 2 மனைவிகள், துரைசாமி, பாஸ்கர், ஜம்பு, கந்தன் ஆகிய மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தாண்டாயி, அல்லியம்மாளின் 4 மகன்களுக்காக திமுக பிரமுகர் சேகரிடம் கடந்த 1995-ம் ஆண்டு ரூ.20 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த கடன் தொகைக்கு ஈடாக தாண்டாயிக்கு சொந்தமான 580 சதுர அடி நிலத்தை சேகர் தனது அனுபவத்தில் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த நிலத்தை தாண்டாயி தனது மகள் வழி பேத்தி, பேரன்களுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, முறைப்படி தனக்கு கிடைக்க வேண்டிய தாத்தா-பாட்டியின் சொத்தை சேகர் பறித்துக் கொண்டு மிரட்டுவதாக தாண்டாயியின் பேரன் ஆனந்தன் புகார் தெரிவித்திருந்தார்.
இதன்பேரில் சேகர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420, 447, 506(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சேகர் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









