சிதம்பரம் நகரின் மத்தியில் பஸ் நிலையம் உள்ளது. சென்னை, புதுச்சேரி, கடலூர் மார்க்கமாக சிதம்பரம் வழியாக வரும் பஸ்களும், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி மார்க்கமாக சிதம்பரம் வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும் நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்துதான் செல்ல வேண்டும்.
இதனால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. சிதம்பரம் நகருக்குள் நீண்ட தூர பஸ்கள் வந்து செல்லும்போது அதிக நேரமாகிறது. மேலும் பஸ்நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்வதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
மிகுந்த சிரமத்தோடும் ஓட்டுநர்கள் நகருக்குள் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் நகரில் தொடர் விபத்தும் நடைபெற்று வருகிறது. தற்போது அணைக்கரையில் உள்ள கீழணை பாலம் சேதமடைந்து பஸ் போóக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கும்பகோணம் மார்க்கமான பஸ்கள் அனைத்தும் சிதம்பரம் வழியாகச் செல்கிறது.
இதனால் மேலும் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகருக்குள் வராமல் நீண்ட தூர பஸ்கள், கனரக வாகனங்கள் செல்வதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. எனவே நீண்டதூர பஸ்கள் சிதம்பரத்தில் நின்று செல்லும் வகையில் நகரின் எல்லையில் புறவழிச்சாலை அருகே ஒரு பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுததுள்ளனர்.