அரியலூர்: விவசாயிகளின் பொருள்களை விற்பனை செய்து தரும் வேளாண் விற்பனைக் குழுவின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகர் இல்லாமல், நியாயமான விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில், திருச்சி வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் திருச்சி, மண்ணச்சநல்லூர், லால்குடி, துவரங்குறிச்சி, மணப்பாறை, தொட்டியம், காட்டுப்புத்தூர், துறையூர், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மேலணிக்குழி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், கரூர் மாவட்டத்தில் கரூர், சின்னதாராபுரம், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் பொருள்களை விற்பனை செய்வதற்கான ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வரும் பொருள்களைத் தொடர்ந்து 15 நாள்கள் வரை அங்கேயே வைப்பதற்கு மூட்டைக்கு 5 பைசாவும், 16-வது நாள் முதல் 30 நாள் வரை மூட்டை ஒன்றுக்கு 10 பைசா மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும், விவசாயிகள் தங்களது பொருளை அடகு வைத்து கடன் பெறுவதற்கும் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உதவுகின்றன. அவ்வாறு கடன் பெறும் விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டியும், வியாபாரிகளுக்கு 9 சதவீத வட்டியும் மட்டுமே விதிக்கப்படுவதால், ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் இந்த முறையைப் பின்பற்றி கடன் பெறுகின்றனர்.
திருச்சி வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரியலூரில் மக்காச்சோளம், வரகு, வேப்பவத்தல் போன்ற பொருள்களின் வரத்து அதிகமாகவும், ஜயங்கொண்டத்தில் முந்திரி, நிலக்கடலையும், காட்டுப்புத்தூரில் வாழை வரத்தும் அதிகமாக உள்ளதால் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனைக்கூடங்களில் கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர், இளநிலை உதவியாளர், களகண்காணி, அலுவலக உதவியாளர், காவலாளி ஆகிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு ஆள்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில், வேளாண் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தமுள்ள 128 பணியிடங்கள் 65 பணியிடங்களில்தான் ஆள்கள் உள்ளனர். மற்றவை காலிப் பணியிடங்களாக உள்ளன. குறிப்பாக, 2 காவலாளிகள் உள்ள இடங்களில் ஒருவர்தான் பணியில் உள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ள வேளாண் பொருள்களைப் பாதுகாப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறுகின்றனர் காவலாளிகள். விவசாயிகளின் பொருள்களை வாங்கும் வியாபாரிகள், வாகனத்தில் எடுத்துச் செல்லும்வரை அந்தப் பொருள்கள் விற்பனைக்கூடத்தில்தான் இருக்கும்.
மக்காச்சோளம், நிலக்கடலை, எள், மிளகாய் போன்ற பொருள்களைக் காய வைக்கும் பணி விற்பனைக்கூடத்தில் நடைபெறுவதால், அவற்றைப் பாதுகாக்கும் பணியையும் நாங்கள்தான் மேற்கொள்கிறோம். ஆனால், போதிய ஆள்கள் இல்லாதது கடினமாக உள்ளது என்கின்றனர் காவலாளிகள். இதேபோல, இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், களகண்காணி போன்ற பணியிடங்களிலும் ஆள்கள் இல்லாமல் இருப்பதால், பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டடங்களைச் சீரமைக்க வலியுறுத்தல்: மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பெரும்பான்மையானவை பழைய கட்டடங்களில்தான் செயல்பட்டு வருகின்றன.
உதாரணமாக, அரியலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1960-ல் திறக்கப்பட்டு, 1973 முதல் செயல்பட்டு வருகிறது.
ஆனால், இந்தக் கூடத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் பழையதாகத்தான் உள்ளன.
கால்நடைகள் எளிதில் நுழைந்து பொருள்களை சேதப்படுத்திச் செல்லும் நிலையில் சுற்றுச் சுவர் இருப்பதால், அதன் உயரத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. கட்டடங்களைப் பராமரிக்க அனுமதி கோரி இந்தக் கூடத்தின் சார்பில் அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினர் தெரிவித்தனர். அரசுக்கு வருவாயை ஈட்டித்தரும் இந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவதுடன், பழைய கட்டடங்களில் மராமத்துப் பணிகளையும் செய்ய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.