கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாக்களில் மொத்தம் 1 லட்சத்து 1910 ஏக்கர் நிலங்களில் வேளாண் பாசனம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள்கள் விலை உயர்வு, உரத் தட்டுப்பாடு இருந்தும் இந்த ஆண்டாவது லாபத்தை சம்பாதிக்கலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆண்டு புயலால் நெற்பயிர்கள் படுத்து முற்றிலும் சேதமடைந்தது. இதனால் நகைகளை அடமானம் வைத்தும், வங்கியில் கடன் பெற்றும் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் பெருத்த நஷ்மடைந்தனர். அரசு அளித்த நிவாரணமும் போதுமானது இல்லை. அந்த நிவாரணத் தொகையும் முழுமையாக விவசாயிகளை சென்றடையவில்லை என்பது விவசாயிகளை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.