இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்ததால் பழிவாங்கவே கைது: ராமதாஸ்

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என நான் தொடர்ந்து அறிவித்து வருவதால் பழிவாங்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் என பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

News image
Updated On :12 மே 2013, 5:16 am IST

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என நான் தொடர்ந்து அறிவித்து வருவதால் பழிவாங்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா என்னை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார் என பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

திருச்சி மத்திய சிறையில் இருந்து சனிக்கிழமை விடுதலையான அவர் சிறை வாசலில் அளித்த பேட்டி:

விழுப்புரத்தில் கைது செய்த என்னை 15 மணி நேரம் அலைக்கழித்து திருச்சி சிறையில் பாழடைந்த, பழுதடைந்த கட்டடத்தில் ஒரு மரம்கூட இல்லாத இடத்தில் என்னையும் பாமகவினரையும் 11 நாள்கள் அடைத்து வைத்திருந்தனர். தலைநகர் தில்லியில் தினமும் பிரதமர் மற்றும் சோனியாவின் வீடுகளுக்கு முன்பு போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இங்கே மரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கேட்டு முறைப்படி அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள்.

பாமகவினர் மீதும், வன்னியர்கள் மீதும் அறிவிக்கப்படாத அவசர நிலையை அறிவித்திருக்கிறார்கள். எங்களைக் கைது செய்ததால்தான் இத்தனை வன்முறைகளும் நடந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகளைத் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தினார்கள். பல இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை மக்கள் பிடித்திருக்கிறார்கள். சில இடங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் விடுதலைச் சிறுத்தைகளும், தமிழக அரசும், காவல்துறையுமே காரணம்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தலித் மக்களின் வாக்குகளை கவனத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். அதிமுகவை நோக்கி கம்யூனிஸ்டுகளும், இதர கட்சிகளும் செல்லும் நிலையில் பாமகவும் வரும் என்று நினைத்தார்கள். திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று தொடர்ந்து நான் அறிவித்து வருவதை அடுத்து என்னைப் பழிவாங்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக தோற்பது உறுதி. மின்வெட்டு, வறட்சி இவற்றால் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. உண்மை, நேர்மை, தூய்மை, ஜனநாயகம், எதிர்க்கட்சிகளை மதிக்கும்தன்மை இவையெல்லாம் நல்ல ஆட்சிக்கான இலக்கணங்கள். இவை எதுவும் இப்போது இல்லை.

அன்புமணி மீதும், காடுவெட்டி குரு மீதும் தொடர்ந்து வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். வன்னியர்கள் என்றால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கசக்கிறது. எங்கள் மக்கள் தொடர்ந்து போராடுவார்கள். வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம்.

மரக்காணம் கலவரத்துக்கு சிபிஐ விசாரணை கோருவோம். இதற்காக விரைவில் பாமகவின் பொதுக்குழுவை கூட்டி தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும். பாமகவினர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவுவதை ஏற்க முடியாது என்றார் ராமதாஸ்.

பேட்டியின்போது, பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, வழக்குரைஞர் பாலு ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.