மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

"நக்சல் பகுதிகளில் சி.ஐ.எஸ்.எப். பணி மகத்தானது'

நக்சல் பகுதிகளில் சி.ஐ.எஸ்.எப். பணி மகத்தானது என மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.

News image
Updated On :1 ஜூன் 2013, 8:43 pm

நக்சல் பகுதிகளில் சி.ஐ.எஸ்.எப். பணி மகத்தானது என மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார்.

அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எப்.) மண்டலப் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சார்பு உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில், அவர் பேசியதாவது:

இங்கு பயிற்சி பெறும் உதவி ஆய்வாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றக் கூடிய திறமையைப் பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் விமான நிலையங்களில் பணியமர்த்தப்பட உள்ள நிலையில், இவர்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பாதுகாக்கப்பட்ட சுற்றுப்புற சூழ்நிலை மிகவும் முக்கியம், இந்தப் பணியை செய்வதில் சி.ஐ.எஸ்.எப். தனி பங்காற்றி வருகிறது. இந்திய பொருளாதார சொத்துகளைப் பாதுகாப்பதில் சி.ஐ.எஸ்.எப். தனிமுத்திரை பெற்றது. கடந்த ஆண்டுகளைவிட பாதுகாப்புப் பணியில் இதன் வளர்ச்சி பிரமிக்கவைக்கிறது.

விமான நிலையங்களில் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு உலகளவில் பெயர் பெற்றுள்ளது. இதனால், வானில் பறக்கும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்புடன் செல்வதாக உணர்கின்றனர். நக்ஸலைட்டுகள் இருக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இவர்கள் ஆற்றி வரும் பாதுகாப்புப் பணிக்கு ஈடுஇணை இல்லை என்றார் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

முன்னதாக, பயிற்சி முடித்த 330 சார்பு உதவி ஆய்வாளர்களின் அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். பயிற்சிகளில் சிறந்து விளங்கிய அல்வினாரெலாங் (அனைத்து பயிற்சிகள்), சோஹன்லால் (உள்ளரங்கப் பயிற்சி),

ஜெகன்னாத் அசாரிகா (மைதான பயிற்சி), கபில்பார்தி (துப்பாக்கி சுடும் பயிற்சி) ஆகியோருக்கு சிறப்புப் பரிசுகளையும், சிறந்த பரேட் கமாண்டரான விவேக்லாமாவுக்கு ஆளுநரின் கோப்பையையும் அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் வழங்கினார்.

விழாவுக்கு பயிற்சி மைய முதல்வரும், டி.ஐ.ஜி.யுமான ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.எஸ்.எப். டிஐஜி ராஜீவ், தேசிய பேரிடர் மேலாண்மை பிரிவு கமாண்டண்ட் எம்.கே.வர்மா, அரக்கோணம் டிஎஸ்பி சீதாராம், தக்கோலம் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.