ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எஸ். சரவணபெருமாள் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூரைச் சேர்ந்த கு. தங்கமுத்து அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2013, 11:12 pm

மாநிலங்களவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் எஸ். சரவணபெருமாள் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தஞ்சாவூரைச் சேர்ந்த கு. தங்கமுத்து அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மாநில மாணவரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் எஸ்.சரவணபெருமாள் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகவுள்ளன. அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அதிமுக குழு துணைத் தலைவர் டாக்டர் வா.மைத்ரேயன், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கே.ஆர்.அர்ஜுனன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் டி.ரத்தினவேல், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.லட்சுமணன், கட்சியின் மாணவர் அணிச் செயலாளர் எஸ்.சரவணபெருமாள் ஆகியோர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (ஜூன் 10) அறிவித்திருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணபெருமாளை மாற்றிவிட்டு, தஞ்சாவூரைச் சேர்ந்த கு.தங்கமுத்துவை 5-ஆவது வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.

வாழ்க்கைக்குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட திருநல்லூரைச் சேர்ந்தவர் கு. தங்கமுத்து.

25-ஆவது வயதில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவோணம் ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்றார். 1980-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி.

1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக (ஜெ) சார்பில் போட்டியிட்டு தோல்வி. 1991 - 96 வரை திருவோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர். 1999 மற்றும் 2004-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி.

கட்சியில் மாவட்டச் செயலர், பால்வள வாரியத் தலைவர், மாநில பாடநூல் வாரியத் தலைவர், பெரியகோவில் சதய விழாக் குழுத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்த இவர் தற்போது அதிமுக மாநில விவசாயப் பிரிவுச் செயலராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

இன்று மனுதாக்கல்: சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம், அதிமுக வேட்பாளர்கள் 5 பேரும் புதன்கிழமை மனு தாக்கல் செய்கிறார்கள். ஒவ்வொரு வேட்பாளரும் 10 அல்லது 11 எம்.எல்.ஏ.க்களின் முன்மொழிவுடன் தங்களது வேட்புமனுவை அளிக்கின்றனர். காலை 10 மணியளவில் முதல்வரின் இல்லம் அல்லது கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரும்படி வேட்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன்பிறகு அவர்கள் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், வேட்பாளர்களுடன் 50 எம்.எல்.ஏ.க்களும் வரவுள்ளனர். ஒவ்வொரு வேட்பாளரையும் பத்து அல்லது 11 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிவார்கள் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.