ஆட்சியை செம்மையாக செய்வதிலும், கட்சியை நல்லவிதமாக நடத்துவதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் வேறு யாரும் இல்லை என முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசினார்.
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடித் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
கட்சியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி பேசியது:
எனது சுயமரியாதையை காப்பாற்றவே திமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு வந்தேன். தன்மானம் உள்ள எவரும் நான் எடுத்த முடிவை பாராட்டுவர்.
தற்போது தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. சட்டம் - ஒழுங்குப் பிரச்னை சீராக இருக்கிறது. நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறது. முதல்வராக இருக்கும் ஜெயலலிதா பிரதமராக வரமாட்டாரா? என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.
அவர் பிரதமராக வந்தால் கட்சத்தீவு மீட்கப்படும். என்.எல்.சி. தொழிலாளர் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்னைகளுக்கு நிச்சயம் நல்லத் தீர்வு கிடைக்கும்.
35 ஆண்டுகள் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் சென்று திமுகவுக்காக உழைத்த நானே அதிமுகவுக்கு வந்துவிட்டேன். இனி அங்கிருந்து வரவேண்டியவர்கள் உரிய நேரத்தில் வந்து சேர்வர். ஆட்சி செய்வதிலும், கட்சியை நடத்துவதிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் முதல்வர் ஜெயலலிதா கைகாட்டும் வேட்பாளர்தான் வெற்றிவாகை சூடுவார் என்றார் பரிதி.
அமைச்சர் எம்.சி.சம்பத், எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன், நகராட்சி துணைத் தலைவர் குமார், மருத்துவப் பிரிவு துணைச் செயலர் சீனுவாசராஜா, ஒன்றியச் செயலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ஐய்யப்பன் தலைமை வகித்தார். நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலர் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் குமரன் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










