

தஞ்சாவூரில் வரும் ஜனவரி 11-ம் தேதி தேமுதிக சார்பில் நடைபெறும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தேமுதிக சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களுடனும் சுமுகமான நட்புறவின் மூலம் விவசாயிகளுக்கும், தொழில்புரிவோருக்கும் உரிய நேரத்தில் உதவிகளைப் பெற்றுத்தர வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.
ஆனால், இன்றைய ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க இந்த அரசு முன்வரவில்லை. விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் இந்த அரசு காப்பாற்றவில்லை.
வரலாறு காணாத மின்வெட்டு, அதனால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, பாலியல் வன்முறைகள், ஜாதிக் கலவரங்கள் ஆகியவற்றால் இந்த ஆண்டு பொங்கலை கறுப்பு பொங்கலாக தேமுதிக கொண்டாடுகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதில் காட்டும் வேகத்தையும், அக்கறையையும் மக்கள் நலனில் காட்டாத இந்த அரசை தேமுதிக கண்டிக்கிறது.
வரும் ஜனவரி 11-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஏழைகளுக்கு பொங்கல் வைப்பதற்கான பொருள்களும், பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட 10 விவசாயிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.