தவணை முறையில் மனை தருவதாக மோசடி: சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சேலம் மாவட்ட
Updated on
1 min read

தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து ஓமலூர் அருகேயுள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்த ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்:

சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த செல்வராஜ், பள்ளப்பட்டியைச் சேர்ந்த தனஞ்செயன் இருவரும் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் அமைத்து தவணை முறையில் பணம் வசூலித்து வந்தனர்.

 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் நிலம் கொடுப்பதாகக் கூறியதை அடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் ரூ.2.70 லட்சம் கட்டியிருந்தோம். இதையடுத்து நிலம் கிரயம் செய்யச் சொல்லி செல்வராஜ், தனஞ்செயனிடம் சென்று கேட்டபோது, ஏற்கெனவே காட்டிய இடத்தை விட்டு விட்டு தொலைவில் இருந்த கரட்டுப் பகுதியைக் காட்டினர்.

 இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ரூ.1.02 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி பணத்தை வட்டி போட்டி ஏப்ரல் 22-ம் தேதி தருவதாகச் சொன்னார்கள். ஆனால் குறிப்பிட்ட தேதியில் சென்று கேட்டபோது, பணம் கொடுக்க முடியாது என்று மிரட்டுவதுடன் கொலை செய்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

 இது போல் பலரிடமும் அவர்கள் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com