விருதுநகரில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் எதிரே கொட்டப்படும் பல்வேறு கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வெயிலுகந்தம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேர்கள் வழிபாடு செய்வதற்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து பொருள்கள் வாங்குவதற்காகவும் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உள்ள பழக்கடைகள், பூக்கடைகள், சிற்றுண்டி நிலையங்கள் என பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் திருக்கோயில் எதிரே கொட்டுவதால் குவிந்து காணப்படுகிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு துர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே நகராட்சி நிர்வாகம் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில், நகராட்சி பகுதியில் குப்பைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருக்கோயில் வளாகம் முன்பு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.