விருதுநகர் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே கட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(38). இவருக்கும் மகேஸ்வரிக்கும் திருமணமாகி 14 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில், பாலகிருஷ்ணன் எவ்விதமான வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால், இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், மகேஸ்வரி(36) இப்பகுதியில் பருப்பு ஆலையில் வேலைக்குச் சென்றாராம். பின்னர் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த பாலகிருஷ்ணன், மனைவியிடம் மதுக்குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தாராம். இதில், கொடுக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேஸ்வரியை சராமரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தார்.
உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நள்ளிரவில் உயிரிழந்தார்.
இது குறித்து பஜார் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து கணவர் பாலகிருஷ்ணனை கைது செய்து கொலைக்கு காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.