
சென்னை: நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. ஆனால் எனக்கோ அம்மா தான் வாழ்க்கை என்று தனது முதல் உரையில் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா.
அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். கண்ணீர் மல்க தனது உரையை அவர் ஆற்றினார்.
அவர் பேசியதாவது, அம்மாவை என்றும் நெஞ்சத்தில் சுமந்து வாழும் சகோதர, சகாதரிகளே வணக்கம்.
தமிழகத்தை வழி நடத்திட்ட அம்மா நம்முடன் இல்லாத நிலையில், இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், கழகம் தான் தமிழகத்தை ஆளும் என நம் அம்மா விட்டுச் சென்ற நம்பிக்கையை காப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
நமக்கு பெருமைத் தேடித்தந்த, இயக்கத்தின் இதயமாக, ஒவ்வொருவரின் இதயத்தின் இயக்கமாக, எனக்கு எல்லாமுமாய், எனக்கு மட்டும் அல்ல நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த இதய தெய்வம் அம்மாவை வணங்குகின்றோம்.
என்னை கழகப்பொதுச் செயலராக ஒரு மனதாகத்தேர்வு செய்து அம்மாவின் வழியில் கழகப்பணியாற்றிட என்னைப் பணித்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரம் ஆயிரமாயிரம் கூட்டங்களுககு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 36 ஆண்டுகளாக அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று மேடைக்கு வந்து உங்களிடைய பேசும் சூழல் (கண்ணீரை துடைத்தபடி) எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உங்கள் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று நடந்துவிட்டது.
தலையில் இடி வந்து விழுந்ததைப்போல நன்கு உடல் நலம் தேறி வந்த நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.
நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. எனக்கோ அம்மா தான் வாழ்க்கை.
மருத்துவர்களின் போராட்டத்தோடு,கோடானு கோடி தொண்டர்களின் வழிபாடும் ஒன்று சேர, அம்மாவை காப்பிற்றிவிடும் என்று நம்பினேன். போயஸ் தோட்டத்துக்கு வருவார் என்று நம்பினேன். ஆனால், நம்பிக்கை நிறைவேறவில்லை என்று கண்ணீரோடு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.