

பிரபல பின்னணி பாடகி பி.சுசிலா ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்து வழிபட்டார் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட தனிப்பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி பி.சுசிலாவிற்கு கடலூரில் மெல்லிடை கலைஞர்கள் நடத்திய பாராட்டு விழாவில் அவர் பங்கேற்று சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வருகை தந்தார்.
அவருடன் டி.எம்.சவுந்தராஜன் குரலில் பாடும் கண்ணன் உடன் வந்தார். அவரை நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தில்லை ஆர்.மக்கீன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, வாசன் பேரவைத் தலைவர் தில்லை கோ.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் கோயில் பொதுதீட்சிதர்கள் பாடகி சுசிலாவை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: எனக்கு இனிமையான குரல் இறைவன் கொடுத்த வரம். தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பேன்.
இறைவனுக்கு நன்றி தெரிவிக்க இறைவன் சந்நிதிக்கு வந்துள்ளேன். அடுத்து தியாகராஜபாகவதர் பிறந்த ஊரான திருவாரூருக்கு சென்று அங்கு இறைவனை தரிசிக்க உள்ளேன் என பி.சுசுலா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.