சென்னை : இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பாஜக அரசின் சாதனை விளக்க புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் உள்நாட்டிலே தயாரான தேஜஸ் விமானம் செப்டம்பர் மாதத்தில் ராணுவத்தில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் வெளிப்படையாக நடைபெற்று அதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.