புதுதில்லி: விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை நாடளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை , நாடாளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தாவது:
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடனாக ரூ.3000 கோடி வழங்க வேண்டும்.
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் விவசாயிகள் அடைந்த பாதிப்புகளை நிவர்த்தி செய்யய வேண்டும்.
விவசாயிகள் தங்கள் வாங்கியுள்ள விவசாய கடன்களை திருப்பி செலுத்தும் போது பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
வர்த்தக வங்கிகளில் உள்ளதைப் போன்று கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் தொகைகளை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.