உச்ச நீதிமன்றத் தீர்ப்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடக மாநில அரசு: வைகோ கடும் கண்டனம்!
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு செயல்பட்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்தையே


சென்னை: காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு செயல்பட்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காவிரிப் பிரச்சினையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசு செயல்பட்டு வருவது அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, செப்டம்பர் 29 ஆம் தேதி அம்மாநிலம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர் வழக்கறிஞர் பாலி நாரிமனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், செப்டம்பர் 23 இல் கர்நாடக சட்டமன்றமும், சட்ட மேலவையும் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறந்துவிட முடியாது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், கர்நாடக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் அதே முடிவில் உறுதியாக இருக்கிறோம். இந்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்தராமையாவுக்கு வழக்கறிஞர் பாலி நாரிமன் எழுதிய பதில் கடிதத்தில், 'கர்நாடக அரசுக்காக நான் வழக்காடினாலும், நானும் நீதியை நிலைநாட்டும் நீதிமன்ற அதிகாரி என்பதை நீங்கள் உணர வேண்டும். தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கின்றது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். நீங்கள் அனுப்பி உள்ள கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். ஆனால், கர்நாடக மாநிலத்தின் சார்பில் எந்தக் கருத்தையும் நான் முன்வைக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு தீபக் மிஸ்ரா யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், 'சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. அரசியல் சாசனப் பிரிவு 144ன்படி மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இந்தியக் கூட்டாட்சியில் ஒரு மாநிலமாக அங்கம் வகிக்கும் கர்நாடகா, நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. கர்நாடக அரசின் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கையாக ஒரு வாய்ப்பை வழங்குகிறோம். வரும் 1ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரைக் காவிரியில் திறந்துவிட வேண்டும்;' என்று உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஆனால், காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா மாநிலம் ஏற்காமல், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை துச்சமாகக் கருதி அலட்சியப்படுத்தி அறைகூவல் விடுப்பதும் சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகும்.
கர்நாடக மாநில அரசின் சட்ட விரோதச் செயல்களுக்கு மத்திய அரசும் துணைபோய்க்கொண்டு இருப்பது வெட்கக்கேடானது ஆகும். மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, ரமேஷ் சந்தப்பா ஜீகாஜிநாசி ஆகிய மூன்று பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றது வன்மையான கண்டனத்துக்குரியது.
இதுதான் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றும் முறையா? தேசிய ஒருமைப் பாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில் மத்திய அமைச்சர்களே செயல்படுவது கூட்டாட்சி அமைப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினையை சட்டபூர்வமாகத் தீர்ப்பதற்கு மோடி அரசு முன்வரவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...