தென்காசி: தென்காசி அருகே நீரிழிவு நோய்க்கு நாட்டு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மலையான் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). நாட்டு வைத்தியரான இவர் தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் என்ற பகுதியில் ஒரு தோட்டத்தில் வைத்து நாட்டு மருந்து தயாரித்து வழங்கி வந்தார். அல்சர், பிரசர், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளுக்கு நாட்டு மருந்து தயாரித்து கிராம மக்களுக்கு வழங்கி வந்தார். அந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் இவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை முத்துப்பாண்டியிடம் மருந்து சாப்பிடுவதற்காக பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு முத்துப்பாண்டியும் நாட்டு மருந்து வழங்கினார். மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களில் 3 பேர் அங்கே மயங்கி விழுந்தனர். மேலும் நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டியும் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாட்டு மருத்துவர் முத்துப்பாண்டி, இருளாண்டி (42) உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.