மருத்துவ படிப்பிற்கான இடங்களை பணத்திற்கு விற்ற வழக்கில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவுக்கு ஜாமீன் அளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கான இடங்களை ஒதுக்குவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கேட்டுஅவர் தாக்கல் செய்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாணவர்களிடம் இருந்து பெற்றதாக கூறப்படும் பணத்தை நீதிமன்றத்தில கட்டுவதாக அவர் உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பச்சமுத்துவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர் ரூ.75 கோடி பணத்தை சைதாபேட்டை 11-ஆவது நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். மேலும் ரூ 10 லட்சத்திற்கு இரு தனி நபர்கள் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்து ஜாமீன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.