சென்னை: சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொழில் தொடர்பும் இல்லை. நான் குறி வைக்கப்பட்டுள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.
வருமான வரி சோதனை மற்றும் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்க இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமமோகன ராவ்.
அப்போது அவர் பேசுகையில், எனக்கும் சேகர் ரெட்டிக்கும் எந்த தொழில் தொடர்பும் இல்லை. என்னை குறி வைத்துள்ளனர். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. துப்பாக்கி முனையில் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
தலைமைச் செயலர் வீட்டில் சோதனை நடத்தப்படும் போதும், தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்ட போதும் தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது. ஒரு தலைமைச் செயலரை பாதுகாக்கவே தமிழக அரசு தவறி விட்டதால், பொது மக்கள் தங்களது பாதுகாப்பு நிலை குறித்து அஞ்சுகிறார்கள்.
ஜெயலலிதா வழிகாட்டுதல்படியே தான் கடந்த 7 மாதங்களும் செயல்பட்டேன். யாருடைய அனுமதியின் பேரில், தலைமைச் செயலகத்தில் நுழைந்தார்கள். துணை ராணுவப்படையினருக்கு எனது அறையில் என்ன வேலை? தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து தமிழகமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.