முடக்கப்பட்டுள்ள இரட்டை இலைச் சின்னத்தை விதிகளை மீறி பயன்படுத்திய விவகாரத்தில் அதிமுகவின் இரு பிரிவு அணிகளைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்துள்ள பதிலுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் பரஸ்பரம் புகார் தெரிவித்திருந்தனர். அதில், கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய பிறகும் அச்சின்னத்தை சுட்டுரை, முகநூல் உள்ளிட்டசமூக வலைதளங்கள், பொதுக்கூட்டம் போன்றவற்றில் டி.டி.வி.தினகரன் தரப்பு பயன்படுத்துவதாக மதுசூதனன் தரப்பு புகார் கூறியது.
இதேபோல, மதுசூதனனுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய இரட்டை மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல வடிவமைத்து தேர்தல் பரப்புரையில் மதுசூதனன் தரப்பு பயன்படுத்துவதாக டி.டி.வி.தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு இருதரப்பும் அண்மையில் பதில் கடிதங்களை அனுப்பின. இவற்றைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையம், இரு தரப்பினருக்கும் தனித்தனியாக அதன் முதுநிலை முதன்மைச் செயலர் தபஸ் குமார் மூலம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு வருமாறு:
சமூக ஊடகங்கள், சுவரொட்டிகள் போன்றவற்றில் இரட்டை மின் விளக்கு சின்னத்தில் இரட்டை இலைகள் இருப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இதை வாக்காளர்களுக்கு சின்னம் பற்றிய கல்வியறிவை ஏற்படுத்தும் நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் கருதவில்லை. மாறாக, வாக்காளர்களைக் குழப்பி, அவர்களைத் தவறாக வழிநடத்தும் செயலாகக் கருதுவதால் இது தேர்தல் நடத்தை விதி மீறலாகக் கருதப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றத் தவறியதால் தனது கடுமையான அதிருப்தியை மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை உடனடியாக எல்லா இடங்களிலும் அகற்றி இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை சனிக்கிழமை (ஏப்ரல் 8) மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மதுசூதனன் தரப்புக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல, டி.டி.வி.தினகரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்ட பிறகு கடந்த 21-ஆம் தேதி முதல் அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எவ்விதப் புதிய தகவலும் சேர்க்கப்படவில்லை என்று வேட்பாளர் தினகரன் கூறுவதை ஏற்க முடியாது. மேலும், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட கட்சித்தலைவர்களின் படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களிலும் கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை தொடர்ந்து இடம் பெறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தினகரன் தரப்பு அளித்த பதில் ஆணையத்தை திருப்திப்படுத்தவில்லை.
எனவே, ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாததால் தனது கடும் அதிருப்தியை ஆணையம் தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக விதிகளை மீறி இடம் பெற்றுள்ள கட்சியின் முடக்கப்பட்ட சின்னம் போன்றவற்றை சமூக ஊடகங்கள், இணையதளம் போன்றவற்றல் இருந்து நீக்க வேண்டும். அதன் விவரத்தை சனிக்கிழமை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.