என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர ஜெயலலிதாவே விரும்பினார்: டிடிவி தினகரன்

மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்ததும் என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பியதாக அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர ஜெயலலிதாவே விரும்பினார்: டிடிவி தினகரன்


சென்னை: மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்ததும் என்னை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பியதாக அம்மா அதிமுக வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் செய்த சதியால், அதிமுகவில் இருந்து சசிகலா உட்பட நாங்கள் அனைவரும் நீக்கப்பட்டதற்கு பிறகும் நான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

இரண்டு முறை அவரை சந்தித்தேன். சில வேலைகளை செய்வதற்காக அவர் என்னை அழைத்திருந்தால். அரசியலில் சில வேலைகளை நான்தான் செய்ய முடியும் என்று அவர் நினைத்தார். அதே போலத்தான், சசிகலாவை திரும்பவும் சேர்த்துக் கொண்டார். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரை 2009ல் மீண்டும் தேர்தலில் நிறுத்தினார். எனவே, நாங்கள் ஒரு குடும்பம் போல இருந்தோம்.

பன்னீர்செல்வம் தரப்பினர், கட்சிக்குள் உங்கள் குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்கிறார்களே என்ற கேள்விகள், எங்கள் மீது வேறு எதையும் சொல்ல முடியாததால் குடும்பம் குடும்பம் என்கிறார்கள் என்று டிடிவி தினகரன் பதிலளித்தார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது, "நான் திரும்பி வந்ததும் தினகரனை தீவிர அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும். முன்பைப் போல என்னால் இனி அரசியலில் ஈடுபட முடியாது" என்று சசிகலாவிடம் சொன்னதாக என் சித்தி என்னிடம் சொன்னார். அவ்வாறு செய்திருந்தால் இதுபோன்ற கேள்விகள் வந்திருக்காது என்று டிடிவி தினகரன் கூறினார்.

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரையுமோ, அல்லது உயிர் தோழி என்று அறியப்பட்ட வி.கே. சசிகலாவையோ அவர் அரசியல் வாரிசாக சொல்லவேயில்லையே என்று கேட்டதற்கு, ஆமாம் அவர் யாரையுமே சொல்லவில்லை. அவர் திடீரென உயிரிழந்துவிட்டார். அதற்கு முன்பு அரசியல் வாரிசு பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது என்று டிடிவி தினகரள் கூறியுள்ளார்.

நீங்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சென்று சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, ஆம் ஒரே ஒரு முறை மட்டும் மருத்துவமனையில் அவரைப் பார்த்தேன் என்றார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றால் அது நாங்கள்தான் என்றார் அவர். அப்போது நாங்கள் என்றால் யார் யார் என்ற கேள்விக்கு, நானும், சசிகலாவும் தான் என்றார்.

மற்றவர்கள் யாரும் இல்லையா? டாக்டர் வெங்கடேஷ் இருக்கிறாரே என்ற கேள்விக்கு, நான் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே நாங்கள் என்று சொன்னேன். நான்தான் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளேன் அதனால் அவ்வாறு சொன்னேன் என்றார் டிடிவி.

என்னை ஜெயலலிதா எவ்வாறு ஏற்றுக் கொண்டார்  என்பதை இடைத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் சொல்வார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com