பெரியகுளம்: சசிகலா இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது:
எங்களுடைய அணியின் நிலைமை நான் முன்பே ஜெயலலிதா சமாதியிலும், தொலைக்காட்சி நேர்காணல்களிலும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். முன்னாள் முதல்வரான எம்ஜியாரால் அதிமுக ஒரு மக்கள் இயக்கமாக தொடங்கப்பட்டது. அது ஒரு தனி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்சென்று விடக் கூடாது என்பதில் அவரும், பின்னர் ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். இதுதான் எங்களது உறுதியான நிலைப்பாடும் ஆகும்.
ஜெயலலிதாவின் வழியிலேயே கட்சியும் ஆட்சியும் நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் அதிமுக சட்ட விதிகளுக்கு மாறாக கட்சி பொதுச் செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது. அவரது நியமனங்களும், கட்சி நீக்க அறிவிப்புகளும் செல்லாது.
எனவே சசிகலா இருக்கும் வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார் என்று நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அதே போல இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கண்டிப்பாக நீதி விசாரணை நடைபெறும்.அவரது மரணத்தை சூழ்ந்துள்ள மர்மம் நீங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு பனீர்செல்வம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.