தீபா கணவர் மாதவன் புதிய கட்சித் தொடங்கினார்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், இன்று புதிய கட்சியைத் தொடங்கினார்.
மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில், தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை மாதவன் வெளியிட்டார்.
மாதவன் தொடங்கியுள்ள கட்சிக்கு எம்.ஜெ.டி.எம்.கே. என்று பெயரிட்டுள்ளார். அதாவது எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்று கட்சியின் பெயர் அமைந்துள்ளது.
எம்.ஜி.ஆர்-அம்மா- தீபா பேரவையின் தலைவரான தீபாவின் கணவர் மாதவன் புதிய கட்சி ஒன்று தொடங்குவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். தீபாவுடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் அவர்.
இந்த நிலையில், அவர் முன்னதாக கட்சித் தொடங்குவது குறித்து கூறுகையில், தீபா துவங்கியுள்ள பேரவையில் தீய சக்திகள் சிலவற்றின் தலையீடு உள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்படுவது கிடையாது. தகுந்த நேரம் வரும்போது அந்த தீய சக்திகளை யாரென்று வெளிப்படுத்துவேன்.
தற்போது புதிதாக கட்சி ஒன்று துவக்க உள்ளேன். தீபா துவங்கியிருப்பது பேரவை. நான் துவக்க உள்ளது கட்சி. நான் கட்சி துவங்க இருப்பது தொடர்பாக தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று மாதவன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.