நடிகை குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி அளித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, தேனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிப்பட்டி, தேனி, நத்தம் காவல் நிலையங்களில் குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, குஷ்புவின் கடவுச்சீட்டை புதுப்பித்துத் தர சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் மறுத்தது. இதை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறார், எங்கு தங்குகிறார் உள்ளிட்ட விவரங்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 26 முதல் மே 14 வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல உள்ளதாகவும், எனவே தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார்.