சென்னை: பொதுமக்களின் பிரச்சினைகளில் மெத்தனம் காட்டும் தமிழக அரசினைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் நிகழும் உட்கட்சிப் பூசலில் இரு அணிகளும் உடனே இணைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அத்துடன் இனி இணைப்பதற்கான பேச்சு வார்தை பற்றிப் பேசுவதாக இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்து இருந்தார்.
அத்துடன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அவர் தற்பொழுது இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தற்பொழுது அந்த அணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதே நேரம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் நாளை சென்னையில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடுத்த கட்டமாக பொதுமக்களின் பிரச்சினைகளில் மெத்தனம் காட்டும் தமிழக அரசினைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 10-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்ச்சல், 'நீட்' தேர்வு அனுமதி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க கோரி வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்துக்கு, ஓ .பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார்.