இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் மீன்பிடிக்க சென்ற 160 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இவர்களது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவ சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. இதில் முதல் கட்டமாக 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு ஏற்கெனவே தமிழகம் வந்தனர். இரண்டாவது கட்டமாக 69 மீனவர்களை விடுவிக்க மன்னார், பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது. இதனை ஏற்று 69 மீனவர்களையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் அனைவரும் ஒரிரு நாள்களில் தமிழகம் அழைத்து வரப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.