

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதால் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் 2007 ஆகஸ்ட் 18-இல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை ஒரு நிரந்தரப் பணியாளர் கூட நியமிக்கப்படவில்லை.
அந்த நிறுவனத்தில் தொடக்கத்தில் மொத்தம் 120 தற்காலிகப் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
ஆனால், அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த தமிழறிஞர்கள் அல்லாத அதிகாரிகளால் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 40-ஆகக் குறைந்து விட்டது.
அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யும்படி பல்வேறு நிலைகளில் வலியுறுத்தியும் எந்த பயனும் ஏற்படாத நிலையில், அவர்களில் 13 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அக்டோபர் 13-இல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை 4 மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும்,இரண்டரை மாதங்கள் ஆகிவிட்ட பின்னரும் அதைச் செயல்படுத்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர்தான் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.
அவர் தலைமையில் ஆட்சிமன்ற குழுவைக் கூட்டி 13 பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்ய ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றினாலே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
எனவே, ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு தமிழறிஞர் ஒருவரை நிரந்தர இயக்குனராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.