

வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கடந்த 20-ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விடியோ காட்சியை வெளியிட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதே போல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெற்றிவேல் தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் வாதாட அவகாசம் தரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.