வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னை - திருப்பதி சாலையில் பணிகளை முடிக்காமல் சுங்கவரி வசூலிப்பு: வாகன ஓட்டிகள் புகார்

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மராமத்து மற்றும் பாலப் பணிகளை முழுமையாக முடிக்காமல் சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி வசூலிப்பதாகவும், அதேசமயம் சாலைகள்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 9:05 pm

DIN

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மராமத்து மற்றும் பாலப் பணிகளை முழுமையாக முடிக்காமல் சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி வசூலிப்பதாகவும், அதேசமயம் சாலைகள் சரியான பராமரிப்பின்றி உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் திருத்தணி, ரேணிகுண்டா, புத்தூர், திருப்பதி வரையில் ஏராளமான பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. குறுகலான சாலையாக இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் நோக்கில் சாலையில் தரைப்பாலமாக இருப்பதை மேம்பாலமாக அமைத்து விரிவாக்கம் செய்ய, கடந்த 2008-இல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை-பாடி முதல் திருத்தணி வரையில் 64 கி.மீ., திருத்தணியில் இருந்து திருப்பதி வரை 62 கி.மீ. என மொத்தம் 126 கி.மீ-க்கு சாலை விரிவாக்கம் செய்வதற்கும், இச்சாலையில் நாராயணபுரம், பட்டரைபெரும்புதூர் ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் ரூ. 571 கோடி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, 2009-இல் ஒப்பந்தப் பணிகள் விடப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இதுவரை, சாலையில் மராமத்துப் பணிகளும், பாலப் பணிகளும் முடிக்கப்படாமலேயே உள்ளன. 
இதற்கிடையே முழுமையான அளவில் பணிகளை முடிப்பதற்கு முன்னதாகவே பட்டரைபெரும்புதூர் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், 20 முதல் 22 ஆண்டுகள் வரை வாகன வரி வசூல் செய்து கொள்ளும் வகையில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சாலைப் பராமரிப்பு உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒப்புதலோடு அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வரி வசூல் செய்கின்றனர். இவ்வாறு வசூல் செய்யும் தொகையில் சாலைப் பராமரிப்பு மட்டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல், சாலை ஓரங்களில் குடிநீர் தொட்டிகள் வைத்து தண்ணீர் விநியோகம் செய்தல், வாகன ஓட்டுநர்கள் தங்குவதற்கான ஓய்வு இல்லங்கள் அமைத்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை இந்நிறுவனம் செய்து கொடுக்கவில்லை எனவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியினையும் டோல்கேட் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. 
இதுகுறித்து சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் கஜேந்திரன் கூறியதாவது: இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், இச்சாலையில் எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. குறிப்பிட்ட இடங்களில் மின் விளக்கு, சுகாதார வளாகங்கள், குடிநீர் வசதி இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் மையத் தடுப்புகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக சுங்கச்சாவடி பணியாளர் ஒருவர் கூறுகையில், இச்சாலையில் செல்லும் சிறு வாகனங்களுக்கு ஒரு முறைக்கு ரூ. 40, சென்று திரும்ப ரூ. 30, சரக்கு வாகனம் மற்றும் பயணிகள், சுற்றுலாப் பேருந்துகளுக்கு ஒரு முறை செல்ல ரூ. 95, சென்று திரும்ப ரூ. 145 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இதேபோல், ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கும் ரூ. 1.80 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் என, நாள்தோறும் குறைந்தது ரூ. 4.90 லட்சம் முதல் ரூ. 5.50 லட்சம் வசூலாகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் என்னென்ன பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிற விவரம் குறித்து நிறுவனத்துக்குத் தான் தெரியும் என்றார்.
பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாராயணபுரம், பட்டரைபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 20 நாள்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதைக் கருத்தில் கொண்டே அங்கு மேம்பாலங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இரு மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.