சென்னையில் வருவாய் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆய்வின் போது அங்குள்ள கார் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அதிலிருந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களிடம் மேற்கொண்டு விசாரித்த போது ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த காரில் வைத்திருந்த குளிர்சாதன கம்ப்ரஸர் சாதனத்தில் இதனை மறைத்து வைத்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
மொத்தம் 10.459 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு விமானம் மூலமாக கடத்தப்பட்டு பின்னர் அங்கிருந்து கூரியர் வாகனத்தில் சென்னைக்கு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.