சென்னை: இன்றைய பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் 'சோ' இருந்திருக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற 'துக்ளக்' இதழின் 47-ஆவது ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று சென்னையில் 'துக்ளக்' இதழின் ஆண்டுவிழா நடைபெறுவது வழக்கம். அதில் கலந்து கொண்டு அப்பத்திரிக்கையின் ஆசிரியர் சோ உரையாற்றுவார். கடந்த மாதம் அவர் மறைந்து விட்ட நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் 47-ஆவது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;
சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்த பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது சோவை மருத்துவமையில் சென்று பார்த்தார். அப்பொழுது அவர் கூறியது மாதிரியே ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அவரும் உயிரோடு இருந்தார்.
எனக்கு அவர் மிகவும் சிறந்த நண்பனாக, ஆலோசகராக இருந்தார். ஐ.பி,எல் போட்டிகள் துவங்கிய பொழுது இது கண்டிப்பாக பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே சென்னை அணியை வாங்கலாம் என்று அறிவுரை கூறினார். அப்போது வெறும் லட்சங்களில் அணிகளில் விலை இருந்தது. ஆனால் நான் வாங்கவில்லை. ஆனால் இப்போது அணிகளின் விலை ஆயிரம் கோடிகளில் உள்ளது.
சோவிடம் வந்து ஆலோசனை கேட்காத தமிழக அரசியல்வாதிகளே இல்லையென்று கூறிவிடலாம். மாநில அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பிரதமர் மோடி உள்ளிட்ட தேசியத்தலைவர்களும் சிக்கலான விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்டு வருவார்கள்.தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் 'சோ' கண்டிப்பாக இங்கே இருந்திருக்க வேண்டும் .
சோவின் பலம் என்பது அவரது உண்மை மட்டும் தான். அதையே நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
இத்துடன் சோ தொடர்பான மேலும் சில நினைவுகளையும் மேடையில் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.