நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போராட்டக் களமாக மாறிய புதுச்சேரி: நிரம்பி வழிந்த ஏஎப்டி மைதானம்

ஜல்லிக்கட்டு விவகாரம் எதிரொலியாக புதுச்சேரி நகரம் போராட்டக் களமாக மாறியது. இதன் ஒரு பகுதியாக ஏஎப்டி மைதானத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவியர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2017, 7:31 am

சுஜித்குமார்

புதுச்சேரி: ஜல்லிக்கட்டு விவகாரம் எதிரொலியாக புதுச்சேரி நகரம் போராட்டக் களமாக மாறியது. இதன் ஒரு பகுதியாக ஏஎப்டி மைதானத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவியர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், காளை மாடுகளை காட்சிப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும், அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் கடந்த 4 நாள்களாக தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.

புதுச்சேரியில் ஏஎப்டி மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து மாணவ, மாணவியர், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 4-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தீவிர போராட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் கலை, மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் ஏஎப்டி திடலுக்கு சாரை சாரையாக வந்தனர். அதே போல் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தனித்தனியாக அண்ணா சாலை, விழுப்புரம் சாலை, மறைமலையடிகள் சாலை, வழியாக பதாகைகளுடன், செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக ஏஎப்டி திடலுக்கு வந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், வழககுரைஞர்கள், வியாபாரிகள், இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் மெக்கானிக் சங்கத்தினர், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், உள்பட ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் சார்பில் காளை மாட்டை அடக்குவது தொடர்பான பிரம்மாண்ட ஓவியம் வரைந்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் காளை மாடு உருவத்தையும் மாணவர்கள் வடிவமைத்திருந்தனர்.

காளை மாட்டுடன் ஊர்வலம்
புதுச்சேரி அகில பாரத சத்திரிய மகாசபை சார்பில் அதன் தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமையில் 4 காளை மாடுகளுடன் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது.

மேலும் புதுச்சேரி போட்டோ, வீடியோ ஸ்டுடியோ உரிமையாளர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. சிங்காரவேலர் சிலை அருகே 30-க்கு மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் தனியாக அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மொட்டை அடித்த இளைஞர்
ஜல்லிக்கட்டை நடத்தவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் கலந்து கொண்ட சுரேஷ் என்ற இளைஞர் மொட்டை அடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

வாகன பேரணி
அதே போல் பல்வேறு அமைப்புகள் சார்பில் புதுச்சேரி நகரம் முழுவதும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், வாகன பேரணி, நடைபெற்றது. போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் போராட்டங்கள் நடைபெற்றன.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்
புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கடற்கரை சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகே சூரியபிரகாஷ், கோபி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகை
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைமையில் அதன் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் ஏராளமானோர் ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தால் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட போராட்டத்தால் புதுச்சேரி நகரமே போராட்டக்களமாக மாறி இருந்து குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.