மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இட்லி மாவு, ஹாலோபிளாக்ஸ், அகர்பத்தி, தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி.யை சீராக்க நடவடிக்கை

இட்லி மாவு, ஹாலோபிளாக்ஸ், அகர்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழில்களுக்கான ஜி.எஸ்.டி. யை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

News image
Updated On :9 ஜூலை 2017, 7:49 pm

DIN

இட்லி மாவு, ஹாலோபிளாக்ஸ், அகர்பத்தி மற்றும் தீப்பெட்டித் தொழில்களுக்கான ஜி.எஸ்.டி. யை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மதுரையில் மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) மற்றும் தொழிற்பேட்டை சங்கங்கள் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி விளக்கக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
மடீட்சியா தலைவர் எல். முராரி தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:
சரக்கு மற்றும் சேவைக்கு மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக வரி விதித்த நிலையில், நுகர்வோரிடம் பொருள் விற்கப்படும் இடத்திலேயே இரு வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் வசூலிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. மத்திய அரசால் திடீரென கொண்டுவரப்படவில்லை. நாட்டில் உள்ள 29 மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், சில யூனியன் பிரதேச பிரதிநிதிகள் சேர்ந்து பலமுறை கூடி ஆலோசித்த பிறகே இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யில் விதிக்கப்பட்ட வரியானது பொருத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக காய்கறி, பழம் போல விரைவில் கெட்டுவிடும் இட்லி மாவுக்கு உள்ள வரியை சீராக்கவும் கோரப்படுகிறது. அதேபோல கடலை மிட்டாய்க்கும், பீட்சாவுக்கும் உள்ள வரி வேறுபாடும் விமர்சிக்கப்படுகிறது.
சிறு தொழிலில் ரூ. 20 லட்சத்துக்கு கீழே வருவாய் உடையவர்களுக்கு ஜி.எஸ்.டி. பொருந்தாது. ஆனால், அதற்கு மேலான வருவாய் உடையவர்கள்கூட இழப்பீடு பெறும் பிரிவில் விண்ணப்பித்து பயனடையலாம். ஆனால், வரி செலுத்தவும், தொழிலைப் பதிவு செய்யவும் விரும்பாமலிருப்பதற்கு அரசு துணை போகாது.
அரசுக்கு வரி வருவாய் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஜி.எஸ்.டி. கொண்டு வரப்படவில்லை. இருக்கும் வரி வசூல் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க வேண்டும் எனில் அதன் தொழில்களை வரைமுறைப்படுத்துவது அவசியமாகிறது.
இட்லி மாவு, ஹாலோபிளாக்ஸ், அகர்பத்தி, தீப்பெட்டி தயாரிப்பின் வகைகள் மற்றும் சாக்கு, டயர் உள்ளிட்டவை குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி அவற்றின் வரியை தெளிவுபடுத்தி சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன், தணிக்கையாளர் ஆர்.சுந்தரம், பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வாசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.