ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகையா?

சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவிக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2017, 9:17 pm

DIN

சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவிக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக சிறைத் துறை டிஐஜி டி.ரூபா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் நடைபெறும் பல்வேறு சட்ட விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து கர்நாடக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) ஆர்.கே.தத்தா மற்றும் ஊழல் தடுப்புப் படையிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தார்.
அந்த அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள சசிகலாவிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு, கர்நாடக சிறைத் துறை டிஜிபியும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான எச்.என்.சத்தியநாராயண ராவ் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சசிகலாவுக்கு தனியாக சமையல் அறை வசதி செய்து கொடுத்துள்ளதோடு, சமையலுக்கு சக கைதிகள் உதவி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ள சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயணா, " தன் மீது டிஐஜி டி.ரூபா அளித்துள்ள புகார் அடிப்படை ஆதாரமற்றது. மத்திய சிறையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதுகுறித்து என்னிடம் விவாதித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, ஊடகங்களில் இதுகுறித்து பேசியது சரியல்ல. என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.
எனினும், இதுகுறித்து விசாரணை நடத்தினால், அதற்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன். சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளையும் நான் வழங்கவில்லை. மேலும், சசிகலாவிடம் இருந்து நான் எந்த பணத்தையும் பெறவில்லை' என்றார்.
இதனிடையே, தனது புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அலுவலக ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டிஐஜி டி.ரூபா, " பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் உள்ள சட்ட விதிமீறல்களை வெளியிட்டுள்ளேன் . இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்.
நான் குறிப்பிட்டுள்ள 9 குற்றச்சாட்டுகளில் 1-2 குற்றச்சாட்டுகள் கேள்விப்பட்டதாகும். மற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவையாகும்' என்றார்.
"குற்றச்சாட்டில் உண்மையில்லை': கர்நாடக மாநில அதிமுக செயலர் வா.புகழேந்தி கூறுகையில், " சிறையில் சசிகலாவுக்கு எவ்வித சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை. சசிகலாவை 15 நாள்களுக்கு ஒருமுறை நான் சந்தித்து வருகிறேன். சசிகலாவுக்கு தனி சமையலறை இல்லை. சசிகலா தனியாக சமையல் செய்யவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. சிறப்பு சலுகை அளிக்க ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாகக் கூறுவதில் உண்மையில்லை.
இதுதொடர்பாக சசிகலா சார்பில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவெடுத்தால், புகார் தெரிவித்த டி.ரூபா நீதிமன்றத்தில் அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.
விசாரணைக்கு உத்தரவு: இதனிடையே, சிறையில் சிறப்பு சலுகைகளைப் பெற சிறைத் துறை டிஜிபி எச்.என்.சத்தியநாராயணாவுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுவது உள்ளிட்ட டி.ரூபாவின் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு காவல் துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்ததும் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.