கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவினை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் குழுவினை உடனடியாக கலைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் குழுவினை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
2 min read

சென்னை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சகாயம் குழுவினை உடனடியாக கலைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையில் கிரானைட் முறைகேடு நடைபெற்று வருவதாக கடந்த 2013ம் ஆண்டு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  2014ம் ஆண்டு தமிழகத்தில் மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை யை நடத்த உத்தரவிட்டது. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் 40 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் விசாரணை நடத்தி, முறைகேடு தொடர்பான முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தியதில் ரூ.1.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைகேட்டில் மத்திய, மாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற தாசில்தாரர் மீனாட்சி சுந்தரத்துக்கு  ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி சகாயம் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் என்ற அளவில் 8 மாதத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும், விசாரணைக்காக ரூ.5 லட்சம் செலவாகியுள்ளது. அதற்கான பணமும் அளிக்கப்படவில்லை என்றும் சகாயம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு குழுவின் பணிக்காலம் முடிவடைந்ததால் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு வாதிட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அமைத்த குழுவின் பணிக்காலம் முடிவடைந்ததா என்பதை உயர் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சகாயம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டார்.

இதையடுத்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டது.மேலும், சகாயம் குழுவினர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், ரூ.1.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்பட்டிருப்பது தவறானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. 

கிரானைட் கற்களை வெட்டிக் கடத்தி ரூ.57 ஆயிரம் அளவுக்கு தான் ஏற்றுமதி நடந்திருக்கும் போது எப்படி ரூ.1 லட்சம் அளவுக்கு முறைகேடு நடந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சகாயம், எனது விசாரணை அறிக்கையை சந்தேகிப்பது, எனது நேர்மையை சந்தேகிப்பதற்கு சமம். நேர்மையான அதிகாரிகள் கொண்ட விசாரணைக் குழு, மிகவும் நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ளோம் என்றும் கூறினார்.   

இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது சகாயம் குழுவினை உடனடியாக கலைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் வரும் 31-ஆம் தேதி இந்த குழுவானது இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்க குழுவிற்காக வாங்கப்பட்ட கணினி, பிரிண்ட்டர் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் அனைத்தையும் அரசிடம் திரும்பி அளிக்க வேண்டும் வேண்டும்,என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com